நான் ஒருவன் ஊழல் குறித்து புகார் செய்வதால் நாட்டில் ஊழலே இல்லாமல் செய்து விட முடியுமா என்ன?, என பலரும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.
இருப்பினும் மாற்றம் என்பது தனி ஒரு மனிதனிடத்தில் இருந்துதான் பிறந்திட வேண்டும்.
இந்த சிந்தனை ஒவ்வொரு தனி மனிதனிடமும் தோன்றூம் போது, இது சமுதாய சிந்தனையாக உருமாறுகிறது என்பது மிகப் பெரிய உண்மை.
தனி மனிதனிடம் தோன்றும் விழிப்புணர்வும், மாற்றமும் தான், அவனது குடும்பத்தையும் பின் சமுதாயத்தையும் மாற்றுகிறது.
நான் ஊழலில் ஈடுபடாதிருந்தால் போதும், அடுத்தவன் என்ன செய்தால் எனக்கென்ன என்று இருந்து விடல் நிச்சயம் கூடாது.
மற்றவர் செய்யும் ஊழலினால் பின் பாதிக்கப்பட போவது நமது ஒட்டு மொத்த சமுதாயமும், நாடும் தான்.
தவறாக கை மாற்றப்படும் பணமும், பதவி துஷ்பிரயோகமும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த தவறுவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதையேதான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ சக்காரியா ஜாஃபார் அவர்தம் கருத்தாக பதிவு செய்துள்ளார்.
மக்கள தயங்காமல் ஊழல் குற்றங்கள் குறித்து புகார் செய்ய முன்வர வேண்டும்.
ஊழல் தடுப்பு அமைப்புகள் என்றுமே தனியே செயல்பட முடியாது.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் குறிப்பிட்ட விஷயங்களையோ அல்லது குற்றங்களையோ விரைவில் தீர்த்து விட உதவும்.
நாட்டின் ஒவ்வொரு அமைப்பும் நாட்டில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்கவே அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. இருப்பினும் இந்த அமைப்புகள் சரியே செயல்படுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
சமீப காலமாகவே ஊழல் தொடர்பான பிரச்சனைகள் நாட்டில் தொடர்ந்து தலை தூக்கி வருவதும், பின்னர் அவற்றில் பல சட்டத்தின் முன் கொண்டு செல்லப்பட்டு தண்டனைப் பெற்று தரப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இருப்பினும் இவை அனைத்தும் ஊழல் குற்றங்களை முற்றாக துடைத்தொளிக்க உதவவில்லை என்ற போதிலும் அவற்றை குறைக்க முந்தைய தண்டனைகள் வழி செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.
சமுதாயத்தில் நடக்கும் பெரும் பகுதி ஊழல் குற்றங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். அவற்றை அவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்ய வேண்டும்.
அப்படி புகார் செய்வதன் மூலம் அந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள்.
இத்தகைய விஷயங்கள் அடுத்து அதே குற்றத்தைச் செய்யத் துணியும் தரப்பினருக்கு நல்லதொரு பாடமாக அமையும்.
சமுதாயத்தில் நடக்கும் இத்தகைய ஊழல் குற்றங்களை வேரோடு அறுத்தெடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே என்ற தவறான கண்ணோட்டத்தை விட்டொழித்து, இது என் பொறுப்பும் கூட என ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் உணர வேண்டும்.
இதுவே நல்லதொரு மாற்றமாக அமையும்.
No comments:
Post a Comment