Wednesday, July 29, 2015

அநாவசிய குற்றச்சாட்டுகள் விசாரணையைத் தாமதமாக்கும்

தனிப்பட்ட அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைக் காட்டிலும் முக்கியம் அத்தகைய அமைப்புகளுக்கு விசாரணையை வழி நடத்த தகுந்த அவகாசம் வழங்குவது.

விசாரணை சரியாக நடத்தப்பட வேண்டுமாயின் இடை இடையில் புகுந்து குட்டையை குழப்புவதை சில தரப்பினர் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி அடிக்கடி கூறப்படும் கருத்துகள் வெளிப்படையான கருத்துச் சுதந்திரத்தை பிரதிபலிக்கும் போதிலும் அவை தொடர் விசாரணைக்கு பெருந்தடையாக அமைவது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நாட்டில் பெரும் பகுதியினர் பேசிப் பேசிப் களைத்துப் போன ஒரு விஷயம், 1.எம்.டி.பி விவகாரம். களைத்த பின்னரும் பேசுவதை விடாது தொடருகின்றனர் சில தரப்பினர். 

சுயேட்சையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் சிலர் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் போதிலும்,இவை அனைத்தும் கண் துடைப்பு வேலைகள் என கோஷம் இட்டு வெறும் வதந்திகளைப் பரப்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சிலரைப் பிடித்து விசாரணை நடத்துகின்றனர் சுயேட்சைக் குழுவினர், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். இவற்றில் எது சட்டத்திற்கு உட்படாமல் நடக்கிறது?

விசாரணை என்று வரும் பொழுது சம்பந்தப்பட்டவர்களை ஒவ்வொருவராக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விசாரிப்பது தான் முறை. அதுவே இப்போது நடந்து வருகிறது.  

இதுவரையில் இந்த விவகாரத்தில் பிடிப்பட்டவர்கள் வெறும் நெத்திலி மீன்களே, சுராக்களை அல்லவா பிடிக்க வேண்டும் என பலரும் அரைகூவல் விடுத்து வருகின்றனர். 

எந்த ஒரு விசாரணையிலும் நெத்திலி மீன், சுரா மீன் என தடுத்து வைக்கப்பட்டவர் பிரிக்கப்படுவது இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட விசாரணைக்கு உதவுபவர்களாகவே அமைவர். 

சில சமயங்களில் நெத்திலி மீன்கள் எனக் கருதப்படும் தரப்பினரே விசாரணையின் பெரும் புள்ளிகளாக இருப்பர். இவர்களே அடுத்தக் கட்ட விசாரணைக்கு பெரும் பங்காற்றுபவர்களாகவும் அமைவர். 

ஆக 1 எம்.டி.பி விவகாரத்தில் இப்படி பிரித்துப் பார்க்க  வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த விசாரணை தொடர்ந்து சரியாக நடத்தபட வேண்டுமாயின் அனைவரும் விசாரணை முடியும்  வரை சற்று மௌனம் காப்பதே சாலச் சிறந்தது. இதுவே விசாரணை விரைவில் முடியவும் வழி வகுத்துக் கொடுக்கும். 



Monday, July 27, 2015

வளமான வாழ்க்கைக்கு, உயர்ந்த தெளிவான சிந்தனையே உரம்!

'மனம்' என்பது கோவில் என்றார்கள் நம் முன்னோர்கள். எத்துனை உண்மை அடங்கியிருக்கிறது இந்த பொன்னான வார்த்தைகளில்.  மனம் என்றுமே கோவிலாக மட்டுமே இருத்தல் வேண்டும். அந்த கோவிலில் நாம் விதைக்கும் எண்ணங்கள் தெய்வாதினமாக அமைந்திட வேண்டும். உயர்ந்த எண்ணகள் நம்மை உயர்வான, விசாலமான மனிதராக பிரதிப்பலித்திடும்.

ஒரு மிகப் பிரபலமான ஆங்கில பொன்மொழி சொல்கிறது, உன் சிந்தனைகளும் எண்ணங்களுமே உன் பிம்பங்கள். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். ஆகவே என்றும் உயர்வாகவே எண்ணுங்கள், அத்தகைய எண்ணங்கள் உங்களை மென்மேலும் உயர்த்திக் காட்டும்.

எண்ணம் தெளிவாக இருப்பின் வாழ்க்கை எளிமையாகிவிடும். பல குழப்பங்களுடனும், அநாவசியப் பிரச்சனைகளுடனும் எண்ணம் குழம்பி இருப்பின் வாழ்க்கை  நிதானம் இழந்து சிதைந்து விடுவதும் உண்டு.

ஆக என்றுமே மனத்தை தெளிவாக வைத்திருக்க முயற்சிப்போம். அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழி வகுக்கும்.

- வளமான வாழ்க்கைக்கு, உயர்ந்த தெளிவான சிந்தனையே உரம்!

1 எம்.டி.பி அலுவலகத்தில் திடீர் சோதனை


1 எம்.டி.பி விவகாரம்; மக்கள் குழம்பாமல் சிந்திக்க வேண்டும்


தகவல்கள் கசிந்தது எங்களால் அல்ல - எம்.ஏ.சி.சி விளக்கம்


1 எம்.டி.பி விசாரணை தொடர்பில் இரண்டாவது நபர் தடுத்து வைப்பு


1 எம்.டி.பி விசாரணை தொடர்பில் நிறுவன இயக்குநர் கைது


Wednesday, July 22, 2015

ஆரூடங்கள் தேவையில்லை, நம்பிக்கை வைத்து விசாரணைக்கு வழி விடுங்கள்

சமீபத்தில் 1.எம்.டி.பி விவகாரம் நமது நாட்டு மக்களை மட்டுமின்றி உலகின் பார்வையையே மலேசியாவின் பக்கம் திருப்பியது அனைவரும் அறிந்ததே.

அனைவரின் கவனத்தையும் இவ்விவகாரம் சுண்டி இழுத்ததற்கான இரு முக்கிய காரணங்கள், ஒன்று, இதில் சம்பந்தப்பட்டிருக்கும் உயர் அந்தஸ்த்துகுரிய நபர், மற்றுமொன்று இதில் களவாடப்பட்டதாக நம்பப்படும் அதிகமான பணம்.

ஆகவே தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்த்தாற் போல் 1எம்.டி.பி விவகாரத்தில் தனி ஈடுபாடு காட்டி வருகின்றன.

இன்றைய நவீன வளர்ச்சி மயத்தில் நாடு எதிர் நோக்கியுள்ள  மிக பெரிய சவால் மிகுந்த பிரச்சனையாக இது வலம் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக நாட்டில் நடந்துள்ள பிரச்சனைகளைப் பின்நோக்கி பார்க்கையில் பி.எம்.எப், பெர்வாஜா மற்றும் பி.கே.எப்.ஸீ வழக்கு விசாரணைகள் அத்துனை எளிதில் மக்கள் நினைவிலிருந்து நீங்கியதாக தெரியவில்லை.

இருப்பினும் கடந்து போன இந்த வழக்குகள் அவ்வளவாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் இன்று இருப்பதைப் போன்ற நவீன தகவல் ஊடக வசதிகள் அன்று  இல்லாததே ஆகும்.

இயல்பாகவே சாதாரன வழக்குகளைக் காட்டிலும் உயர் அந்தஸ்த்துகளில் இருப்பவர்களைச் சம்பந்தப்படுத்திய வழக்குகள் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். 

அதிலும் குறிப்பாக இந்த விசாரணையில் பலரும் தத்தம் விருப்பங்களுக்கு ஏற்றவாறு எக்கச்சக்கமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

1.எம்.டி,பி விவகாரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவும் இந்த தரப்பினரின் விமர்சனங்களுக்கு விதிவிலக்கல்ல.

பலர் இந்த சிறப்பு பணிக்குழு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். இப்பணிக்குழு ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும், சுயேற்சையாக செயல்படுவதில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன.  

அடிப்படையில் பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா இயக்கங்களைச் சார்ந்த பலரின் குற்றச்சட்டுகள் மீண்டும் மீண்டும் சிறப்பு பணிக்குழுவின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதுடன், குறிப்பிட்ட தரப்பினர் பதவி விலக வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

சிறப்பு பணிக்குழு மட்டுமின்றி தேசிய கணக்காய்வகம் (பி.ஏ.சி) மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் பாய்கின்றன.

நாடு மற்றும் அதன் மக்கள் நலன் கருதி உறுவக்கப்பட்ட அடிப்படை சட்ட திட்டங்கள் மீது நாமே நம்பிக்கை இழந்திருப்பது விமர்சனங்களுக்கு அப்பால் கடும் வேதனைக்குரிய விஷயம் .

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் மற்றும் விசாரணை நடத்தும் தரப்பு ஆகியவற்றிற்கான அடிப்படை வேறுப்படுகளைப் பகுத்தறிய கூடிய மனப்பக்குவம் பலருக்கு இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

1.எம்.டி.பி விசாரணையில் இது தெளிந்த நீரோடைப் போன்று தெள்ளத் தெளிவானது.

தேசிய வங்கி, அரச மலேசிய போலீஸ்படை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தேசிய வழங்குறைஞர் ஆகியவற்றை உள்ளடக்கியதே 1 எம்.டி.பி யை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு.

இதே தரப்பினர் வெவ்வேறு பணிக்குழுவின் மூலம் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை உட்படுத்திய பல்வேறு குற்றச்சட்டுகளை விசாரித்துள்ளனர் என்பதும், அவற்றில் சில நீதியின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் மறந்திருக்க முடியாது.

அன்றைய சூழ்நிலையில் சரிவர தனது கடமைகளைச் செய்ய முடிந்த இதே தரப்பினரை உள்ளடக்கிய பணிக்குழு இன்று மட்டும் தனது கடமையிலிருந்து எப்படி பின்வாங்கும்?

அன்று இக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் கடமை தவறாமைக் குறித்து எவரும் கேள்வி எழுப்பியதுமில்லை.

அதே போன்று எல்லா விசாரணையின் போதும் விசாரிக்கும் தரப்பின் மீது நம்பிக்கைக் கொள்வது அவசியம்.

இந்த நம்பிக்கை விசாரிக்கப்படும் விவகாரத்திற்கும், தனி ஒரு மனிதனுக்கும் தொடர்புடைய சாதக பாதகங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பது மிக அவசியம். 

தத்தம் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாற்றிக் கொள்ள தங்கு தடையற்ற பூமியில் நாம் வாழ்வது உண்மையெனினும், அக்கருத்துக்கள் அவதூறுகளாகவும், அடிப்படைத்தன்மையற்றதாகவும் இல்லாதிருப்பது மிக அவசியம்.

1எம்.டி.பி விவகாரத்திலும் விசாரணைக் குழுவிற்கும் தேசிய கணக்காய்வகத்திற்கும் விசாரிப்பதில் தனிப்பட்டச் சுதந்திரம் வழங்க வேண்டியது அவசியம்.

இவ்விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கும் சில தரப்பினர் அம்முயற்சியை உடனடியாக கைவிடுவதே சாலச்சிறந்தது.

இதுவே நியாமான விசாரணைக்கு வழி வகுக்கும்.





விரைவில் தீர்வை எதிர்பார்ப்போம்!


அனைத்தையும் அரசியல் கண்ணோட்டமாக்காதீர்...


சோதனை நடவடிக்கை ஆரம்பமானது


சிறப்பு பணிக்குழுவின் அதிரடி வேட்டை 

Sunday, July 19, 2015

லஞ்சம் கொடுப்போர் இல்லையேல் பெறுநரையும் இல்லாமல் செய்யலாம்


தவறு என்று தெரிந்தும் செய்யப்படும் கடுங் குற்றங்களுள் ஒன்று ‘லஞ்சம்’, கொடுப்பது மற்றும் பெறுவது. சமயம், சட்டம், மனித நேயம் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும் எக்காலத்திலும் தவறுதான். எனினும் சற்றும் தயக்கம் இன்றி சுயநலத்தின் பேரில் பொது நலத்தை அடமானம் வைத்து மனிதன் செய்யும் தவறு இது. 

அடுத்தடுத்து மலேசியாவில்  நடந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறைந்து வருவதாக உலகலாவிய அறிக்கைகள் அறிவித்திருப்பது, வாடிய நெஞ்சுக்கு சற்றே மயிலிறகால் வருடிய உணர்வை தரும் போதிலும், அவ்வப்போது இது ஆங்காங்கே நடப்பது உள்ளூணர்வை கில்லத்தான் செய்கிறது.

மிகச் சிறந்த உதாரணம் நேற்றும் அதன் முன் தினமும் கேமரன் மலையில் சட்ட விரோத காய்கறி பயிரிட்டு பின் அதனை மூடி மறைப்பதற்கு அமலாக்க பிரிவினருக்கு கையூட்டு வழங்க முன் வந்தோரின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் [ஏம்.ஏ,சி,சி] நடத்திய அதிரடி வேட்டை.

தாங்கள் செய்யும் சட்ட விரோத செயலைக் கண்டு கொள்ளாதிருக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கிய குற்றத்திற்காக ‘ஒப்ஸ் செஜுக்’ எனும் எம்.ஏ.சி.சி யின் நடவடிக்கையின் கீழ் 21 தோட்ட உரிமையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின் ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் ஒரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளம் நிறைந்த பொக்கிஷ அம்சங்களுள் ஒன்று கேமரன் மலைப்பகுதிகள். இன்று மனிதனின் ராட்சத குணத்தால் இதற்கும் பங்கம் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து குறை கூற ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக பல தரப்புகள் மீது குறைகளை அடுக்கி கொண்டே போகலாம். இருப்பினும் எதுவும் தொடங்கிய இடத்தில் இருந்தே முற்றுப் பெற வேண்டும். லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஒழிக்கப்பட வேண்டுமாயின் அது வழங்கப்படுவதிலிருந்து முதலில் தடுக்கப்பட வேண்டும்.

உடனடியாக இது யார் பொறுப்பு? யார் இதனை தடுக்கக் கூடும் எனும் கேள்வி எழும்பும். இதனைத் தடுப்பதில் அடுத்தவரின் தலையீட்டை நாடுவது ஏன்? எதுவும் தன்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதுவே உத்தமம். மாற்றம் எப்போதுமே தனி மனிதனிடத்தில் இருந்து உருவாக வேண்டும்.

ஒரு தனி மனித மாற்றம் தான், ஒரு குடும்ப மாற்றத்திற்கும் பின் சமுதாய மாற்றத்திற்கும் அதன் பின்னர் நாடளவில் மாறுதல்கள் ஏற்படுவதற்கும் வித்திடும். லஞ்சத்தை ஒழிப்பத்திலும் இதுவே சிறந்த வழி. லஞ்சம் கொடுத்து எதையுமே சரி செய்து விடலாம் எனும் எண்ணத்தை மாற்றுங்கள்.

செய்த தவறுகளையும், செய்யுப் போகும் தவறுகளையும் பணத்தால் மூடி மறைத்து விட முடியும் என்ற எண்ணத்தையும் வேரோடு அறுத்து எரியுங்கள். அரசாங்க மற்றும் அமலாக்க அதிகாரிகள் அனைவருமே காசுக்கு விலைப் போபவர்கள் தாம் என்பது எவ்விதத்திலும் அடிபடையற்ற உண்மை. லஞ்சம் கொடுக்கும், கொடுக்க தயாராய் இருக்கும் ஒரு சிலரின் அடி மனதில் திருப்பிடித்திருக்கும் எண்ணங்கள் மேற்கூறியவை யாவும். இதனை மாற்றுங்கள்.

இன்றிலிருந்து எது நடப்பினும் நான் லஞ்சம் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுங்கள். செய்த குற்றங்களுக்கு சட்ட ரீதியில் தகுந்த தண்டனை எதுவோ அதனை ஏற்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இனி இத்தகைய தவறுகளைச் செய்ய போவதே இல்லை என்று கங்கனம் கட்டிக் கொள்ளுங்கள். இன்று முதல் லஞ்ச ஒழிப்பில் உங்கள் பங்கும் இருக்கும்.


லஞ்சம் பெறுபவர்களை மட்டுமே பூதக் கண்ணாடி வைத்து மிகைப்படுத்திப் பேசும் வழக்கத்தை வளர்த்துக் கொண்ட நாம், இனி லஞ்சம் கொடுப்பவர்களையும் கண்டிக்க துவங்குவோம். கொடுப்பது நிறுத்தப்பட்டால் பெறுவது தானகவே நின்று விடும். இன்றே செயல்படுங்கள், இனி வரும் மாற்றங்கள் இனிதாகவே அமையட்டும்.