Sunday, July 19, 2015

லஞ்சம் கொடுப்போர் இல்லையேல் பெறுநரையும் இல்லாமல் செய்யலாம்


தவறு என்று தெரிந்தும் செய்யப்படும் கடுங் குற்றங்களுள் ஒன்று ‘லஞ்சம்’, கொடுப்பது மற்றும் பெறுவது. சமயம், சட்டம், மனித நேயம் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும் எக்காலத்திலும் தவறுதான். எனினும் சற்றும் தயக்கம் இன்றி சுயநலத்தின் பேரில் பொது நலத்தை அடமானம் வைத்து மனிதன் செய்யும் தவறு இது. 

அடுத்தடுத்து மலேசியாவில்  நடந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறைந்து வருவதாக உலகலாவிய அறிக்கைகள் அறிவித்திருப்பது, வாடிய நெஞ்சுக்கு சற்றே மயிலிறகால் வருடிய உணர்வை தரும் போதிலும், அவ்வப்போது இது ஆங்காங்கே நடப்பது உள்ளூணர்வை கில்லத்தான் செய்கிறது.

மிகச் சிறந்த உதாரணம் நேற்றும் அதன் முன் தினமும் கேமரன் மலையில் சட்ட விரோத காய்கறி பயிரிட்டு பின் அதனை மூடி மறைப்பதற்கு அமலாக்க பிரிவினருக்கு கையூட்டு வழங்க முன் வந்தோரின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் [ஏம்.ஏ,சி,சி] நடத்திய அதிரடி வேட்டை.

தாங்கள் செய்யும் சட்ட விரோத செயலைக் கண்டு கொள்ளாதிருக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கிய குற்றத்திற்காக ‘ஒப்ஸ் செஜுக்’ எனும் எம்.ஏ.சி.சி யின் நடவடிக்கையின் கீழ் 21 தோட்ட உரிமையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின் ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் ஒரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளம் நிறைந்த பொக்கிஷ அம்சங்களுள் ஒன்று கேமரன் மலைப்பகுதிகள். இன்று மனிதனின் ராட்சத குணத்தால் இதற்கும் பங்கம் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து குறை கூற ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக பல தரப்புகள் மீது குறைகளை அடுக்கி கொண்டே போகலாம். இருப்பினும் எதுவும் தொடங்கிய இடத்தில் இருந்தே முற்றுப் பெற வேண்டும். லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஒழிக்கப்பட வேண்டுமாயின் அது வழங்கப்படுவதிலிருந்து முதலில் தடுக்கப்பட வேண்டும்.

உடனடியாக இது யார் பொறுப்பு? யார் இதனை தடுக்கக் கூடும் எனும் கேள்வி எழும்பும். இதனைத் தடுப்பதில் அடுத்தவரின் தலையீட்டை நாடுவது ஏன்? எதுவும் தன்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதுவே உத்தமம். மாற்றம் எப்போதுமே தனி மனிதனிடத்தில் இருந்து உருவாக வேண்டும்.

ஒரு தனி மனித மாற்றம் தான், ஒரு குடும்ப மாற்றத்திற்கும் பின் சமுதாய மாற்றத்திற்கும் அதன் பின்னர் நாடளவில் மாறுதல்கள் ஏற்படுவதற்கும் வித்திடும். லஞ்சத்தை ஒழிப்பத்திலும் இதுவே சிறந்த வழி. லஞ்சம் கொடுத்து எதையுமே சரி செய்து விடலாம் எனும் எண்ணத்தை மாற்றுங்கள்.

செய்த தவறுகளையும், செய்யுப் போகும் தவறுகளையும் பணத்தால் மூடி மறைத்து விட முடியும் என்ற எண்ணத்தையும் வேரோடு அறுத்து எரியுங்கள். அரசாங்க மற்றும் அமலாக்க அதிகாரிகள் அனைவருமே காசுக்கு விலைப் போபவர்கள் தாம் என்பது எவ்விதத்திலும் அடிபடையற்ற உண்மை. லஞ்சம் கொடுக்கும், கொடுக்க தயாராய் இருக்கும் ஒரு சிலரின் அடி மனதில் திருப்பிடித்திருக்கும் எண்ணங்கள் மேற்கூறியவை யாவும். இதனை மாற்றுங்கள்.

இன்றிலிருந்து எது நடப்பினும் நான் லஞ்சம் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுங்கள். செய்த குற்றங்களுக்கு சட்ட ரீதியில் தகுந்த தண்டனை எதுவோ அதனை ஏற்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இனி இத்தகைய தவறுகளைச் செய்ய போவதே இல்லை என்று கங்கனம் கட்டிக் கொள்ளுங்கள். இன்று முதல் லஞ்ச ஒழிப்பில் உங்கள் பங்கும் இருக்கும்.


லஞ்சம் பெறுபவர்களை மட்டுமே பூதக் கண்ணாடி வைத்து மிகைப்படுத்திப் பேசும் வழக்கத்தை வளர்த்துக் கொண்ட நாம், இனி லஞ்சம் கொடுப்பவர்களையும் கண்டிக்க துவங்குவோம். கொடுப்பது நிறுத்தப்பட்டால் பெறுவது தானகவே நின்று விடும். இன்றே செயல்படுங்கள், இனி வரும் மாற்றங்கள் இனிதாகவே அமையட்டும்.

No comments:

Post a Comment