Thursday, November 19, 2015

பிரதமர் அழைக்கப்படுவார் – எம்.ஏ.சி.சி தகவல்


எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷினல் மற்றும் 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரம் தொடர்பாக பிரதமரின் விளக்கங்களைப் பதிவு செய்ய டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அழைக்கபடுவார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை தமது தரப்பு தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவரிடம் தேவைப்படும் விளக்கங்களைப் பெறுவதற்கு எம்.ஏ.சி.சி தயாராக உள்ளதாகவும் அபு காசிம் உறுதிப்படுத்தினார்.

எஸ்.ஆர்.சி விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்படும் இருவர் இன்னமும் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டால் இவ்வாண்டு இறுதிக்குள் இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்து விட முடியும் என எம்.ஏ.சி.சி நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்விரு முக்கிய சாட்சிகளும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது எந்த விதத்திலும் பிரதமரின் விளக்கங்களை எம்.ஏ.சி.சி பதிவு செய்வதை தடுக்காது என அபு காசிம் தெளிவுபடுத்தினார்.

எஸ்.ஆர்.சி குறித்த விசாரணை அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர் விசாரணையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கு தமது அதிகாரிகள் கடுமையாக போரடி வருவதாகவும் சொன்னார்.

இதனிடையே 2.6 பில்லியன் ரிங்கிட் விசாரணை விவகாரம் அனைத்துலக வங்கிகளில் பணப்பட்டுவாடாக்களைச் சம்பந்தப்படுத்தி இருப்பதால் அது முடிவுக்கு வருவதற்கு தாமதம் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.    
இந்த விசாரணை நடத்தி முடிக்கப்படுவதற்கு இரு தரப்பு தொடர்பான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார், அவர்.

இந்த ஒத்துழைப்பைப் பெறுவதற்கு எம்.ஏ.சி.சி-க்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.


தொடர்ந்து விசாரணை குறித்த முடிவுகளும் அவ்வப்போது எம்.ஏ.சி.சி – யின் நடவடிக்கைகளை கண்கானிக்கும் சுயேட்சை அமைப்புகளிடம் தெரிவிக்கப்படும் என்றார் அவர். 

No comments:

Post a Comment